ஞானம்
ஒருத்தியை நான் உள்ளளவில்
இருத்தி வந்த காரணத்தால்
வருத்தியதோர் காதலெனும் அன்பு - பழஞ்
சரித்திரமாய்ப் போனதடி பின்பு
கள் எனவும் கழை எனவும்
கருமேக மழை எனவும்
புள் எனவும் பாடியதோர் காலம் - இன்று
புளித்து விட்டதே அந்த நாலும்
நெஞ்சகத்திலே உறைந்த
நினைவலைகள் அவள் செய்த
வஞ்சகத்திலே மறையக் கண்டேன் - தன்னை
ஏற்காத மலருக்கோர் வண்டேன்?
துகில் மனத்திலே காதல்
துயரென்னும் நாய் வந்து
சகதியினை மேலப்பிப் பாயும் - காலச்
சலவையிலே அது மறையும் மாயம்
பூஞ்சோலை வனந்தன்னில்
புலம்பி நின்ற குயிலொன்று
வாஞ்சையுடன் தந்ததடி கானம் - வாழ்ந்த
வாழ்வினிலே வந்ததடி ஞானம்