பரிசம்!
களத்து மேட்டுப் பக்கத்திலே
களச்சுப் போயி நீ இருந்தே
வளச்சுப் போட வந்தேன் நான், செம்பருத்தி - முகத்தை
சுளிச்சு ஏண்டி வச்சுக் கிட்டே துன்புறுத்தி?
வெத்து வேட்டு ஒட்டுக் குள்ளே
விளாம் பழத்து உருண்டை போலே
தத்தளிச்சு நான் இருக்கேன், செல்லக் குட்டி - மனசை
கொத்திக் கிட்டுப் போறியே நீ வெல்லக் கட்டி!
குட்டி போட்ட பூனை போலே
சுத்தி சுத்தி நானும் வாரேன்
முட்டி எல்லாம் வலிக்குதடி, சாத்துக்குடி - என்
சொப்பனத்தை பலிக்க வச்சு ஏத்துக்கடி!
பார்வையிலே மீனை வச்சு
பருவத்திலே தேனை வச்சு
வேர்வையிலே முத்து மாலை செஞ்சுப் புட்டாய் - என்
வாசலுக்கு நீதானே பஞ்சு மிட்டாய்!
உச்சி வெயில் அடிக்குதடி
உடம்பு ரொம்ப துடிக்குதடி
மெச்சி ஒரு பேச்சுப் பேசு, செங்கமலம் - கொஞ்சி
முத்தம் நித்தம் நானும் தாரேன் அங்கமெலாம்!
எச்சிக்கடி கடி கடிச்சு
எனக்கு ஒரு பிடி கொடுத்து
மிச்சத்தைத் தின்னு போடு, கன்னுக் குட்டி - உன்
எச்சி எனக்கு மோட்சமடி பன்னு ரொட்டி!
குடுகுடுப்பை சத்தம் போலே
படுத்துதடி படுத்துதடி
படுக்கையிலே உன் நெனப்பு, பொன்னுரங்கம் - நாமே
பரிசம் போட்டாத்தானே என் கண்ணுறங்கும்!