பிரிவு!
தேன்பலாச் சுளைகள் ஆகத்
தெவிட்டாத இதழ்கள் ஊர
மான்உலா விழிகள் கோர
மகத்தான முறுவல் சேரக்
காண்கிலா தூரம் சென்றாள்
காதலைப் பதித்து வைத்து
வீணுற்ற சிலையாய் நின்றேன்
சிலந்தியின் வலைகள் சூழ!
நாள்பட நாள்பட வருத்தம்
நகருமென்றே நினைத்தேன்
தோள்இரு வைத்தான் கடவுள்
துயரத்தைத் தான் சுமக்க
தாளிலே கவிதை நூறு
தடையின்றி வரவழைத்தான்
பாழ்பட இதையம் வைத்தான்
தாழிடத் தான் மறுத்தான்!
உச்சத்தில் அறிவை வைத்தான்
கச்சத்தில் ஆசை வைத்தான்
பச்சையாய்ப் பாசம் வைக்கும்
பசைநெஞ்சு படைத்து வைத்தான்
மிச்சத்தை மூடி வைத்தான்
மன்மதன் கூட வைத்தான்
நச்செனும் பிரிவை வைத்தான்
நவின்றிடக் கவிதை வைத்தான்!