Error message

Deprecated function: session_set_save_handler(): Providing individual callbacks instead of an object implementing SessionHandlerInterface is deprecated in drupal_session_initialize() (line 245 of includes/session.inc).

அமெரிக்காவில் பசி ஏக்கம்!

(தினம் ஒரு சமையல் போதும்)

திங்கள்

குற்ற நெஞ்சு குறுகுறுக்கும் அதில்
குறைகள் பல உண்டு - என்னைப்
பெற்றவள் செய்த சமையல் அதில் நான்
பிழைகள் கண்ட துண்டு - ருசி
அற்றுப் போன அமெரிக்கா வாழ்வில்
பற்றே இல்லை யடி - ஒரு
வற்றக் குழம்பு அது போதும் அன்னைக்
கை மணம் அதில் வேணும்!

செவ்வாய்

வட்டப் பஞ்சு இட்லிகள் இரண்டு
வார்த்துத் தர வேணும் - கூடப்
பட்டு முறுகல் காகித தோசை
சுட்டுத் தர வேணும் - அங்குப்
பொட்டுக் கடலை தேங்காய் அரைத்த
சட்டினியும் வேணும் - கை
தொட்டு சாப்பிட சாம்பார் கிண்ணம்
கொட்டித் தர வேணும்!

புதன்

முத்துப் பருக்கை மல்லிகைச் சோற்றைப்
பதமாய் வடித்துவிட்டு - அங்கு
மொத்தப் பசுவெண்ணைக் காய்ச்சி நெய்யின்
மண்டி அகற்றி விட்டு - அடிப்
பித்தம் தெளிந்திடப் பூண்டு ரசத்தினைக்
கத்திப் பொங்க விட்டு - பரி
சுத்த வெள்ளரிப் பச்சடி எல்லாம்
சேர்ந்து வர வேணும்!

வியாழன்

பற்களைக் கூசிப் புளித்திடும் மோர் அதில்
காய்கறித் துண்டங் களை - வெட்டி
நற்பெரு வாசனை சீரகம் வெந்தயம்
யாவும் கொதிக்க விட்டு - சுவை
அற்புதமாய்ப் பெறும் அவியல் அதனை
ஆழக் குழிச் சோற்றில் - ஒரு
சொற்பொருள் மறந்து சாப்பிடும் சுகத்தில்
சொர்க்கம் பெற வேணும்!

வெள்ளி

நீண்ட நடுநிசி நேரத்திலே ஒரு
நிம்மதி இல்லா மல் - சிறைக்
கூண்டு கிளியினைப் போல் நடையோ
குறுக்கும் நெடுக்கு மடி - அங்கு
வேண்டிடும் பாண்டம் என்னவெனில் - அது
வெள்ளையும் கறுநிறமாய் - ருசி
தாண்டிடும் இஞ்சி மிளகாய் கடுகு
தாளித்த தயிர் சாதம்!

சனி

அள்ளித் தமிழ் சிந்தும் மதுரை மாநகர்
ஆங்கொரு பாலகனாய் - நான்
பள்ளிச் செலும்வழி வீதியின் முனையில்
பாட்டி ஒருத்தி உண்டு - தரைக்
கொள்ளி அடுப்பதில் வாணலி மீதினில்
கொண்டு இடும் ஆப்பம் - அவள்
வெள்ளை மனசெனப் பூப்பணியாரம்
வேணும் சுடச் சுடவே!

ஞாயிறு

சுட்டுப் பொசுக்கிற வெயிலிலே பனை
நொங்கும் இளநீரும் - பனிக்
கட்டி நடுக்கிடும் வேளையில் நாயர்
டீக்கடை நுரைக் காப்பி - வயிறு
ஒட்டப் பசித்திடும் நாட்களில் பந்தி
இலை வடை பாயசமும் - நான்
கொட்டி மகிழ்ந்திடவே இவை தான்
கிடைப்ப தில்லை யடி!

(எழுத்தாளர் சுஜாதா 2005-ம் ஆண்டு “எனக்குப் பிடித்த கவிதை” என்ற தலைப்பில் ஆனந்தவிகடனில் இதை விமர்சித்திருக்கிறார்.)