ஒரு கிராமியப் பெண்ணின் ஓலம்!
உள்ளே வயிரத்த ஒளிச்சு வச்சு
வெளியே கரித்துண்டா வாள வச்சு
புள்ளே நீ பொளச்சுப் போடினு சொன்னா
புரியலையே உம் பேச்சு, மாரியாத்தா!
பொத்தக் குடிசையில குடியேற வச்சு
பொம்பளைக கூசாம என்னை ஏச வச்சு
ஒத்தச் சேலையில ஒளப்பாட வச்சே
ஒனக்கே அது நியாயமா, மாரியாத்தா?
அப்பனும் இல்ல ஆத்தாளும் இல்ல
அடிச்சுப் போட்டா கேப்பாரும் இல்ல
குப்பையைக் கெளறி குறுணையைப் பொறுக்க
கோளியாநான் நீ சொல்லு, மாரியாத்தா!
ஒத்தரும் இங்க ஒதவாமப் போக
ஒருவாரமா எனக்கு சித்தாளு வேலை
கொத்தனாரு ராயப்பன் கூசாம வந்து
கட்டிலுக்கு வாடீன்னான், மாரியாத்தா!
பொச்சப் பொத்திட்டுப் போவேனு சொன்னேன்
பொசுக்குனு என்கையை ஒருபிடி பிடிச்சான்
மிச்சத்த நெனச்சால கண்ணீரு முண்டுது
மகமாயி, பெரியதாயி, எம் மாரியாத்தா!
ஒத்தக் கை எம்மேல ஒரசிட்ட தால
ரத்தக் கை நான் வெச்சேன், மாரியாத்தா
குத்திக் குதறிக் கூறேடுததுப் போட்டேன்
எங்கப்பன் அருவாளு, மாரியாத்தா!
சவத்தப் பொதச்சிட்டேன், மாரியாத்தா - ரத்த
சேலையையும் அலசிப்புட்டேன், மாரியாத்தா
வெவரங் கெட்டுப் போனாலும், மாரியாத்தா - நான்
வெக்கங் கெட்டுப் போவலையே, மாரியாத்தா!
தள்ளி ஒரு கெணறு உண்டு, மாரியாத்தா - நான்
தூக்குப் போடக் கயிறு உண்டு, மாரியாத்தா
கொள்ளி வெக்க நாதி இல்ல, மாரியாத்தா - என்னைக்
கொன்னாத் தான் லாபம் என்ன, மாரியாத்தா?
கூறுகெட்ட கொத்தனாரு, மாரியாத்தா - என்னைக்
கொலைகாரி ஆக்கிப் புட்டான், மாரியாத்தா
ஊரு விட்டு ஊரு போறேன், மாரியாத்தா - என்னை
உருப்படியா பாத்துக்க, மாரியாத்தா!
வயிரத்த உள்ள வச்ச, மாரியாத்தா - ஒரு
கரித்துண்டா வாள வச்ச, மாரியாத்தா
வயிறெரிஞ்ச வெப்பத்துல, மாரியாத்தா - அந்தக்
கரித்துண்டும் வயிரமாச்சு, மாரியாத்தா!